Sunday, December 28, 2008

அம்மா பகவான் விபசாரம்


இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’.



இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது. யாரிந்த அம்மா பகாவன் என்பதை தெரிந்து கொள்ள என் நண்பனொருவனை அணுகினேன். அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்னான் ‘அம்மா பகவான் கல்கி அவதாரம்’ என்றும் , பல அற்புதங்கள் செய்துள்ளார் என்றும் அவருக்குப் பல்லாயிரம் பக்தர்கள் உள்ளார்கள் என்றும் பக்தி ததும்பச் சொன்னான். நானும் ஏதோ வியந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ஆ! அப்படியா…..!’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.அவன் சொன்னபின் எனக்கிருந்த குழப்பமெல்லாம் அம்மா பகவானை நம்பலாமா நம்பக்ககூடாதா என்பதல்ல, ஒரு தனிமனிதன் பல்லாயிரக்கணக்கான மக்களை எப்படி ஏமாற்றுகிறான் என்பதுதான். பின் இந்த விடயத்தை மூளையில் புதைத்துவிட்டேன்.


பின்பு ‘இந்த கடவுள் (பம்மாத்து) ஜோடிகளின் கள்ள வேலைகள் பற்றி சத்தியண்ணா எடுத்துச் சொன்னார். அண்மையில் ‘கள்” குழுமத்தின் சந்திப்பில் அம்மா பகவான் முடியும் இழுக்கப்பட்டது. அப்போதுதான் இந்த அம்மா பகவானால் ஏற்படும் பாரதூர விளைவுகளை என்னால் அறிய முடிந்தது. இறுதியாக அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக ‘கள்” நண்பர்கள் சிலருடன் திருகோணமலை உவர்மலையில் அம்மா பகவான் பஜனை நடக்கும் இடத்துக்குச் சென்றேன்.


மாலை 5 மணி இருக்கும் நானும் நண்பர் பிரசாந்தனும் முதலில் சென்றோம். சிறிது நேரத்தின் பின் தோழர்கள் சத்தியன், மு. மயூரன் இருவரும் வந்தார்கள். அங்கு சுமார் 15-20 வரையான நடுத்தர வயதுப் பெண்களும், சில இளைஞர் யுவதிகளும் இருந்தார்கள். நாம் கடைசி வரிசையில் உட்கார வைக்கப்பட்டோம். பின் அவர்கள் தங்கள் செயல்களைத் தொடங்கினார்கள். அவர்களின் இம்சையான செயல்களைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்து நகையாகச் சிரித்துக்கொண்டோம். ஏதோ சில மந்திரங்களையும் (ஒலிவடிவம்), மனதைச் சாந்தப்படுத்தும் யோகாக்களையும் சொல்லித்தந்தனர்.


இந்த யோகாக்களினாலும் மந்திரங்களினாலும் சிலவேளை மனது சாந்தப்படலாம். ஆனால் இதன்பின் அம்மா பகவான் இல்லை விஞ்ஞானம் உள்ளதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அதில் பெரிய பகிடி என்னவென்றால் அங்கே பஜனை நடக்கும்போது மின் துண்டிக்கப்பட்டிருந்தது. மெல்லிருட்டிலேயே பஜனை நடந்தது. பின் பஜனை முடியும் தறுவாயில் ஒரு தலைமையம்மா “அம்மா பகவானிட்ட வரம் கேக்கிறவங்க அமைதியா கேளுங்க” என்றதும் அனைத்து பக்தர்களும் (சுயநலவாதிகளும்) கேட்கத்தொடங்கினர். அப்போதுதான் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு வந்தது. அப்போது அந்த தலைமையம்மா “பார்த்தீங்களா அம்மா பகவான் அருளை” என்று சொன்னதும் எனக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது இருந்தாலும் முயற்சி எடுத்து அடக்கிக்கொண்டேன்.ஆனால் மின் துண்டிக்கப் பட்டதிலும் பின் இணைப்பு வந்ததிலும் இது விதியா? அல்லது சதியா? என்பதில் எனக்கு மலையளவு சந்தேகம்.


என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


தோழர்களே! இந்த அம்மா பகவான் தன்னை கல்கி அவதாரம் என்கிறார் (பலர் தம்மை கல்கி அவதாரம் என்கிறார்கள் அது வேறுகதை) எங்கேயாவது கடவுள் தன்னைத்தானே சுயபிரகடனம் செய்வார்களா? அவர் தானே கடவள் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்டு மிக அதிகமான சொத்துகளைச் சேர்த்துக்கொள்கிறார். மக்களின் பணத்தை பறித்துக்கொள்கிறார். அம்மா பகவானைப் பார்ப்பதற்கு 10000 ரூபா பேசுவதற்கு 20000ரூபாவாம் அப்படியானால் படுப்பதற்கு………………..

அம்மா பகவானை காசுகட்டிப் பார்த்தவர்களினதும் பார்க்கப்போகிறவர்களினதும் வாதம் என்னவென்றால் அம்மா பகவானுக்கு காசுகொடுத்துப் பார்த்தால் அந்த காசு பலமடங்கு திரும்பக்கிடைத்துவிடும் என்பதுதான். காசு காசு என்று அலையும் சுயநலாவதிகளே இயலுமானவரை அறிவுள்ள சுயநலவாதிகளாக இருங்கள்.

பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா?. பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார். அங்கேயாவது நமக்கு குறிப்பிட்டகாலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இங்கே நாம் காசு கொடுப்பது தெரியும் ஆனால் அது எப்போது பலமடங்காகக் கிடைக்கும் என்பது தெரியாது. இந்த 10000ரூபாவை அல்லது 20000ரூபா வங்கியில் வைப்புசெய்தால் சிறிதளவு வட்டியாவது குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும். வங்கி அம்மாபகவான் போல ஏமாற்றவும் மாட்டாது. அங்கே ரசீது கொடுப்பார்கள் கண்காய்வு செய்வார்கள் சட்டப்பாதுகாப்பாவது இருக்கும்.


நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! எந்தக் கடவுளாவது தன்னை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ காசு கேட்குமா?


பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு விபச்சாரிக்கும் உறவாளருக்கும் உள்ள தொடர்பா? பக்தி ஒன்றும் விபச்சாரவிடயம் இல்லை என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


ம்…சரி உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். அவர் கடவுள்தான்… அப்படியானால் சுனாமிப்பேரலை வருவதற்கு முன் சுனாமி வருகிறது என்று சொல்லி பல இலட்சம் உயிர்களைக் காத்திருக்கலாம் தானே. சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை. பக்தர்களிடமிருந்து கோடிகோடியாகப் பணத்தை எடுக்கும் அம்மா பகவான் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை. சுவாமி சுனாமி நிவாரணம் கொடுக்கக் கூடாது என்பது சட்டமா?


சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் எமது உள்நாட்டு பிரச்சினையும் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை ரட்சிக்கட்டுமே. அவ்வாறு நடந்தால் நானே அம்மாபகவானுக்கு பலகோடி பக்தர்களை சேர்க்கப்பாடுபடுவேன்.



இந்த அம்மா பகவான் பின்னணியில் மாபெரும் உளவுத்துறை செய்றபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்மா பகவான் பின்னணியில் ஒரு உளவுத்தறை பின்னிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை. இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவானூடாக எமது மக்களைச் சிந்திக்கவிடாமல் பக்தி என்ற பத்தடி வளவுக்குள் எம் மக்களின் மூளையை புதைக்க முற்படுகின்றனர். எமது மக்களைச் சுயநலவாதிகளாக்குகின்றனர்.மற்றும் இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவான் மூலமாக எமது மக்களின் தேவை என்ன? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தி தம் நிகழ்ச்சிநிரல்களை எம்மூடாக நகர்த்துவார்கள். அன்பானவர்களே! அம்மா பகவானை வணங்கி அந்நிய ஆதிக்கத்தை உட்செலுத்திவிடாதீர்கள்.


வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் அழுக்குகளைக் கழுவுவதற்கு
--
வி. புருஷோத்மன்

Monday, December 15, 2008

விலைமகள்


வெட்கச் சிவப்புகள் ஏதுமில்லை
சின்னச் சிணுங்கல்கள் துளியுமில்லை
கன்னக் குழி அழகுகள் காணவில்லை
கட்டை விரல் கோலங்களும் இல்லாமல்
அமைதியாய் நான்!

தாலிகயிறு இன்னும் ஏறவில்லை
தொப்புள் கொடியும் அறுபடவில்லை
மெட்டி போட்டுவிட ஒருவனில்லை
சடங்கு சம்பிரதாயத்துக்கு வாய்ப்பில்லாமல்
அமைதியாய் நான்!

சாளரத்தை சாத்திவிட்டு
கதவெல்லாம் பூட்டிவைத்து
ஆடைகளை அவிழ்த்து போட்டு
மனசை மட்டும் இரும்பாக்கி
அமைதியாய் நான்!

தொட்டுபார்க்க ஒருவன்
சுவைத்துப் பார்க்க ஒருவன்
நோய்கள் காவிவரும் ஒருவன்
கர்ப்பத் தடைகளோடு அவர்களுடன்
அமைதியாய் நான்!

இன்றைய முகம் நாளை காண்பதற்கில்லை
எனக்கும்தான் முகவரியும்
முகங்களும் நிரந்தரமில்லை! - ஆனாலும்
அமைதியாய் நான்!



--
மீரா,
திருக்கோணமலை

Sunday, November 23, 2008

k800i கண்களால் மேலும் எட்டு ஒளிப்படங்கள்.


படங்களின் மேற் சொடுக்கி உண்மையான அளவில் பார்க்கலாம்.



















BMICH















[முன்னைய ஏழு ஒளிப்படங்கள்]


Creative Commons License
This work by V. Prashanthan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 United States License.






--
வி. பிரஷாந்தன்,
திருக்கோணமலை

Saturday, August 9, 2008

என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்






என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்
ஒளிந்துகொள்கிறாய் நீ…
இமைகளை மூடிக்கொண்டு
நிஜங்களுக்கு இருட்டடிப்பு செய்கிறாய்…
பகலில் புன்னகையையும்
இரவில் கண்ணீரையும்
என்னுள் விதைக்கிறாய்…
முகாரியை மட்டுமே நேசிக்கின்றன
உன் வீணை நரம்புகள்…
உன்னால் எப்படித்தான் முடிகிறதோ
சுகமாய் வருடும் தென்றலைக்கூட சபிக்க….
உன் கோபங்களின் பெறுபேறு
வெறுமை மட்டுமே…
எனக்காக கொஞ்சம் திறந்து வை
உன் இதயத்தை…
அந்த வெறுமையை வென்றிடும் வீரியம்
என் அன்பிற்கு உண்டு…


--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

Wednesday, July 23, 2008

ஒரு நிமிடம் வா


என் காதல் கடலை விட ஆழமானது
வானை விட உயர்ந்தது என்ற
அடைமொழிகள் கூற விரும்பவில்லை
நான் இறக்கும் தருவாயில் என்னருகில்
ஒரு நிமிடம் வர்

நான் சுவாசித்த உன் வாசங்களைப் பார்
நான் யாசித்த உன் குரல்தனைக் கேள்
நான் எனக்குள் தீட்டிய உன்
வண்ணங்களை மட்டுமல்ல
வர்ணனைகளையும் வந்து பார்
நான் நேசித்த உன்னை நீ
எனக்குள் வந்து பார்

உன் பெயர் சொல்லி என் அணுக்கள் துடிக்கும்
உன் குரல் கேட்டு என் செல்கள் வெடிக்கும்
உனை பார்த்துக்கொண்டே என் இதயம் சுருங்கி
இதயம் சுருங்கி விரியும்
உனை நினைத்துக்கொண்டே என் ஜீவன்
எனை விட்டுப் பிரியும்.

--
மீரா

Thursday, July 10, 2008

சூரியன் என்று சொல்லுங்கள்






"பூமிக்கு ஒரு நிலவு போதாதா? - ஏன்
இத்தனை நிலவுகள்!"


பெண்ணை வர்ணிக்கும்
கவிகளே!


நிலவு வளரும்; தேயும்;
வளர்பிறையை பார்க்க வேண்டும் என்பவர்கள்
தேய் பிறையைப் பார்க்க விரும்புவதில்லை


நிலவுப் பெண்களை எல்லாம்
விலங்கு மாட்டி சொந்தமாக்கி
தேயவைத்து விடுவீர்!
ஒருநாள்
அமாவாசை என்று
சாயமும் பூசி விடுவீர்!


வேண்டாம் இளங்கவிகளே!
நிலவென்ற வர்ணனையை நிறுத்தி விடுங்கள்.


நாம் நிலவல்ல!
சுட்டெரிக்கும் சூரியன்!


கதிர்கள் கொண்டு சாய்த்துக் கொள்வோம்
கண்ணசைவிலேயே சாதித்துக்கொள்வோம்
பகல்நேரச் சூரியன்போல் சுட்டெரிப்போம்
ஒரு நாள் சூரியன் உதிக்காவிட்டால்.....

சூரியன் என்று சொல்லுங்கள்
நிலவில் கூடக் கறைகள் உண்டு - ஆதலின்
சூரியன் என்று சொல்லுங்கள்!


மலரென்று சொல்லி
காயவைத்து உதிரவைத்து சருகாக்காதீர்
அழகென்றுகாட்டி
உயிருடனே புதைகுழியில் புதைக்காதீர்

இன்று பூத்து மாலை மடியும் பூவல்ல நாம்
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதை


விதைகள் ஒருபோதும்
ஒருநாளுடன் புதையாது!

இன்று அடிவேரால் சுவாசித்து
நாளை வெளியில் கிளைபரப்பும்
விருட்சம் நாம்.
நிலவல்ல நாம்..
அழகு மலரல்ல நாம்..

சுட்டெரிக்கும் சூரியனும்
விதைகளாகும் விருட்சங்களுமே

நாம்!

--
மீரா,
திருக்கோணமலை

Saturday, July 5, 2008

(சுவாமி) தந்திரதேவா - தனிநபர் NGO -தன்னின விருப்பு (கல்லு வெட்டுதல்)


[நேர்மையீனங்கள், தனி ஆட்களை புனிதப்படுத்துவதின் பின்னாலுள்ள சமூக விரோத நோக்கங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துவதற்காகவும், வரலாறு நெடுகிலும் திரும்பத் திரும்ப உருவாகும் ஒரே மாதிரியான தனி நபர் சாமிகள், பகவான்கள், புனிதப்படுத்தல்களுக்கெதிரான எழுத்து எதிர்ப்பாகவுமே இக்கட்டுரை கள்ளில் பிரசுரமாகிறது. சமப்பாலுறவினை கொச்சைப்படுத்துவதோ சமப்பாலுறவுத்தேர்வாளர்களைத் இயற்கைக்கு மாறானவர்களாகத் தனிமைப்படுத்துவதோ கள்ளின் நோக்கமன்று. சமப்பாலுறவுத்தேர்வு இயற்கையானதென்பதோடு அத்தேர்வுக்கான அங்கீகாரம் போராடிப்பெறப்படவேண்டியது என்பதிலும் "கள்" நம்பிக்கை கொள்கிறது -கள்]

கடந்தமாதம் இறுதிவாரம் திருகோணமலையில் இரு இறப்புக்கள் நிகழ்ந்தது. ஒன்று தி/உவர்மலை விவேகானந்தாக்கல்லூரிக்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பிரதி அதிபர் சி. காளிராஜா அவர்களின் மரணம். மற்றது வெள்ளைக்கார சாமியார் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் மரணம்.

இரண்டுமே புனிதங்களில் சிறு அசைவை உண்டுபண்ணியது. எனக்கு இரண்டுமே பழைய நினைவுகளை நினைவு படுத்தியது. சில பதிவுகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று ஒரு உந்துதலைத்தந்தது. முன்னது எனது பாடசாலை சம்பந்தப்பட்டது மற்றது சிலகாலம் நான் நெருக்கமாக பழகிய புனிதர் என்று சொல்லப்படுபவர்பற்றியது. பாடசாலை பற்றி நிறைய எழுத இருக்கிறதால் அதை பிறகு எழுதுறன். இப்ப எங்கட மசிர்ராஜ் மன்னிக்க மகராஜ் பற்றிய எனது அனுபவத்தையும் எனக்குத் தெரிஞ்சதையும் எழுதுறன்.

இதுக்கு நான் சாட்சி. நம்பிக்கையில்லாதவர்கள் அவருடன் நான் எடுத்த போட்டோவப்பாருங்க.


செத்தவன பற்றியெல்லாம் கண்டமாதிரி எழுதக்கூடாது கதைக்கிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லவேணும் உங்கட ஹிட்லர், முசோலினி, நாதுராம் கோட்சே, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், ஜே.ஆர் ஜயவர்த்தன இவர்களைப்பற்றியும் இவர்கள் செய்த கொடுஞ்செயல்கள் பற்றியெல்லாம் கதைக்கக்கூடாது. ஏனெனில்; அவர்கள் செத்து கனகாலமாயிற்று அதுக்காண்டி அவாகளின் செயல்களை விமர்சிக்காம இருக்க முடியாது.அப்படி விட்டா எல்லா மசிரும் உயிர் இருக்கும்வரைக்கும் எல்லாத்தையும் செய்திட்டு போவான். உங்களாள அதை செய்யமுடியலாம் என்னால அதை ஏற்கவே முடியாது.

எனது 10, 11வது வயதுகளில் வெள்ளைக்கார சுவாமி பற்றி எனது பள்ளித்தோழன் சொல்லி அறிந்தேன். அக்காலத்தில் எனக்கு சைவசமயம் மீது ஒரு தீவிரவிருப்பு இருந்தது. அனைத்து சமய போட்டிகளிலும் பங்குபற்றுதல் கோயிலுக்கு வேலைசெய்தல் தேவாரம் பாடுதல் என்றுதிரிந்தகாலம் அப்போதுதான் எனது பள்ளித்தோழன் வெள்ளக்கார சாமியார்ட்ட தான்போவதாகவும் என்னையும் வரச்சொல்லி அழைத்தான். அவர் நிறைய திண்பண்டங்கள் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் தருவார் என்றும் சொன்னான். நான் அதற்கு ஆசைப்பட்டு போக சம்மதம் சொல்லி அண்டைக்கு பின்னேரமே போனேன். அவற்ற வீடு எங்கள் உவர்மலையில இருந்ததால் இன்னும் வசதியாகப் பொய்விட்டது. சமயம் என்று சொன்னவுடன் அம்மா உடனே சம்மதம் தந்திட்டா.


உயரமான மதில் கட்டின வீடு டபுள்கேட், பெரியவளவு. வீடு வீட்டுக்குப்பக்கத்தில கோயில் மாதிரி ஒரு மண்டபம் சாமிகளுக்கு சின்னசின்ன கட்டிடங்கள். பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. ‘சுவாமி’ கூப்பிட்டவுடன் வாசலில் நல்ல உயரமா சுருட்டைமுடியோடு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோடு ஒரு வெள்ளைக்காரர் கழுத்தில் உருத்திராட்சமாலை சகிதம் வாசலுக்கு வந்தார். நண்பன் உடனே நமஸ்காரம் சுவாமி என்று காலில் விழுந்து வணங்கினான் அவர் என்னைப்பார்க்க நானும் நமஸ்க்காரம் சொல்லி காலில் விழுந்து வணங்கினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உள்ளே அழைத்துச்சென்றவர் சாமிப்படத்தின் முன்னால் வணங்கச்செய்தார். “குருப்பிரம்மா குருவிஷ்ணு” சுலோகம் சொல்லித்தந்தார். நான் சில தேவாரங்கள் பாடிக்காட்டினேன் எனக்கு தெரிஞ்ச சமயக்கதையையும் சொன்னேன். அவருக்கு மிகுந்த சந்தோசம். எனக்கு குடிப்பதற்கு பால் தந்தார் அத்துடன் வேட்டி நஷனல் சேட் இரண்டு புத்தகங்கள் தந்தார். வெள்ளிக்கிழமை பஜனைக்கு வரச்சொன்னார். சம்மதம் அத்துடன் மீண்டும் அவர்காலில் விழுந்து வணங்கி வீட்டுக்குப்போனோம்.


நடந்ததை அம்மாவிடம் சொன்னேன் அவவுக்கு மிகுந்த சந்தோசம். அப்பாவுக்கு பிடிக்கவில்லை அவன் CIAயிட ஏஜென்ட் அவனிட்ட எல்லாம் போகதே என்றார். அம்மாட சம்மதம் இருந்ததால நான் போகத்தொடங்கினேன் வெள்ளிக்கிழமை வான் வந்து பஜனைக்கு ஏற்றிக்கொண்டு போகும் சுமார் 25 மேற்ப்பட்ட பொடியன்கள் வந்திருந்தார்கள் எல்லோரும் முன்பு சொன்ன கோயிலில் உட்கார்நது பஜனைக்கு ஆயுத்தமானோம் சாமியார் வந்தவுடன் பஜனை ஆரம்பமாகியது. ஒரு மணிநேரத்தில பஜனைமுடிந்தது. எல்லோருக்கும் பற்றீஸ் தந்தார்கள். பற்றீசுக்காகவே பலர் பஜனைக்கு வந்ததாக சொன்னார்கள்.

எனக்கு எல்லாம் பிடிச்சிருந்தது. முக்கியமாக அவர் வீட்டில் இருந்த சமய கதைப்புத்தகங்கள படிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதற்காக அடுத்தநாளே அவரிடம் என் நண்பனையும் அழைத்துச் சென்றேன். முன்பு போல காலில் விழுந்து வணங்கி உள்ளே போனோம். அவரைச்சந்திக்கும் போதும் அவரைவிட்டுப்பிரியும் போதும் அவர்காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இல்லாவிட்டால் அவருக்க கோபம் வரும்.

நான் அவரிடம் சொல்லி புத்தகங்கள் அலுமாரியத் திறந்து புத்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். வீட்டை கொண்டு வாசிக்கலாம் என்று சொன்னவர். என்அருகில் வந்து அமர்ந்து என்னுடைய குடும்ப விபரம் மற்றும் பிறவிபரங்களை கேட்டார். நண்பனை திண்பண்டங்களும் தன்னுடைய உணவுக்கு மரக்கறியும் வாங்கிவரும்படி பணம்கொடுத்து கடைக்கு அனுப்பினார். பின் உள்ளே சென்று சிறது நேரத்தின் பின் வந்து என் அருகில் அமர்ந்து என் கையைப்பிடித்து தன் மடியில் வைத்தக்கொண்டு கதைக்கத்தொடங்கினார். நானும் இயல்பாகவே கதைக்கத் தொடங்கினேன். பின் நண்பன் கொண்டுவந்த மரக்கறியை அவிச்சு வைத்துவிட்டு தின்பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களுடன் வீட்டுக்குப்போனோம். இந்நாடக்ளில் நான் மிகுந்த வெறியுடன் கதைப்புத்தகங்களை அதுவும் படத்துடன் கூடிய கதைப்புங்களை மிகமிக வெறியுடன் வாசிச்ச காலம். அதனால அவர்வீட்டுக்கு அடிக்கடி போவேன் அவர் நடத்தும் பஜனைப்போட்டிகளிலும் சமயசம்பந்தமான போட்டிகளிலும் நான் நிறையப்பரிசில்கள் வாங்கினேன். தவிர கொம்பாஸ் குடை சேர்ட் விளையாட்டுசாமான்கள் என அவர்தரும் பரிசுப்பொருட்கள் என்று எல்லாம் தினமும் அவரிடம் போவதற்கும் அவருக்கு நம்பிக்கையான ஆளாக மாறுவதற்கும் வழிசெய்தது.


ஆரம்பத்தில் கையமைட்டும் பிடித்து கதைத்த அவர் பிறகு கட்டிப்பிடிக்க ஆரம்பித்தார். கன்னங்களில் முத்தமிடவும் (அதை கொஞ்சுதல் என்பது பேச்சு வழக்கு) ஆரம்பித்தார். தொடர்ந்து என் அந்தரங்க இடங்களை தடவுவுதும் மிக இறுக்கமாக கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது எனது கையை தனது மடியில் வைத்து அழுத்துவது என்று அவர் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன.

அக்காலத்தில் வெளியில் இருந்த என் பெரிய நண்பர்கள் எல்லாம் அவரைத் தன்னினச்சேர்க்கையாளர் என்றுதான் சொல்வார்கள் அவர்கள் தமிழில் ‘கல்லு வெட்டுதல்’ என்று அதைக்கூறுவார்கள். நான் அவர்ட 'கல்' என்றுதான் எனக்கு பட்டப்பெயர். வயதுக்கு மீறிய நண்பர்கள் என்றதால் சில விசயங்கள் தெரியும் அதனால அவர்கள் சொன்னமாதிரி நடக்கவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் ஆடைகளைந்துதான் அவர்கள் சொன்னது நடக்கும் என்றபடியால் அதைப்பற்றி கவனமாக இருந்தேன். வயதுக்கு மீறிய நண்பர்களின் தொடர்பால் நான் கொஞ்சம் விபரமானவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட சம்பவங்கள் எனக்கு வரவில்லை.

அவருடைய பிரதான சிஷ்யனாக இருந்ததும் அவர்கட்டிய அவர் காசுவழங்கிய கோயில்களில், இல்லங்களில் நான் மேடைகளில் இருக்கவைக்கப்பட்டதும் அவருடைய பரிசுப்பொருட்களும் குறிப்பாக நான் கேட்கும் சமய புத்தகங்களை அவர்வாங்கித்தந்ததும் எனக்கு பெருமையாகவும் மிகவும் விருப்பமானதாகவும் இருந்தன. அவரின் இச்செயல்கள் பெரிதாக தெரியவில்லை. ஆயினும் அவரின் வாய்துர்நாற்றமும் சிலவேளை உடல்நாற்றமும் என்னை மிகவும் கஸ்ரப்படுத்தின. அவரின் எச்சில் பட்ட கன்னத்தில் தேமல் வந்தது எனக்குப்பிடிக்கவில்லை.


இவ்வாறு ஒன்றரை வருடங்கள் அவரின் 'சின்'னாக இருந்தேன். இறுதியாக எனது இருநண்பர்களுக்கு அவர் வாங்கிவைத்திருந்து உயர்ரக ஊதுபத்திகளை களவெடுக்க உதவிசெய்ததை அவர்கண்டுபிடித்து என்னை தலையில் மிகப்பலமாக குட்டி அடித்து தேங்காய்கள் நிறைந்த ஒரு இருட்டறையில் கொண்டுபோய் பூட்டி வைத்தார். நண்பர்க்ள அன்று வரவில்லை. அடுத்தநாள் நண்பர்களைக் கூட்டிக்கொண்டுவருமாறு சொன்னார் அதன்படி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனேன். நண்பர்களையும் அடித்து இருட்டறையில் பூட்ட முற்பட்டபோது அவரை அறைக்குள் தள்ளி விட்ட நாம் ஓடிவந்துவிட்டோம். அத்துடன் அவரின் தொடர்பு முறிந்து விட்டது.

இது எனது சொந்த அனுபவத்தின் சில பதிவுகள். தவிர அவர் பஜனைக்கு வராதவர்களின் வீட்டுக்குப்போய் வேட்டி மற்றும் தான் கொடுத்த பொருடக்ளைப்பறித்தவருவார். அவர்வீட்டுக்கு வருபவர்களை சமைக்கச் சொல்லுவார். சின்ன சின்னத் திருட்டு செய்பவர்களை அடித்தல் குட்டுதல் இருட்டறையில் பூட்டுதல் என கொடுமைப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒருவர் சாமியாய் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை சந்தாப்பம்கிடைத்தால் வெளுக்கலாம் என்றிருந்தன் கிடைக்கவில்லை. அவர் ஒரு அதிகார வெறியர் தன்னிடம் வருபவர் எல்லோரும தன்காலில் விழவேண்டும் என்று எதிர்பார்ப்பார். எல்லாவற்றையும் விட சிறுவர்களுக்கு ஆசைகாட்டி தன்னிடம் வளைத்து வைத்திருந்தார்.

தவிர அவர் ஒரு தனிநபர் NGO வாகத்தான் தொழிற்பட்டார் வெளிநாடுகளில் இருந்து வரும காசைக்கொண்டு கோயில் கட்டிக்கொடுப்பார். அந்தக்கோயிலில்கள் அவர் இஷ்டப்படிதான நடக்கவேண்டும் என்றுபிடிவாதம் பிடிப்பார். அவர் கட்டிக்கொடுத்த கோயில்கள் எல்லாம் அவரைத்துரத்திவிட்டன. இதற்கான பணம் எல்லாவற்றையும் தானே வைத்திருந்து செலவழித்தார். சகலதும் தன்கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். முக்கியமான விடயம் அவர் ஒர் விளம்பரப் பிரியர் எல்லாப்பேப்பரும் எடுப்பார் அதில் அவர்பற்றிய செய்தியோ படமோ கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகொடுப்பார். அதற்காக நாம் போட்டிபோட்டு அவர்பற்றிய செய்தியை பேப்பர்களில் தேடுவோம். சிலபொடியன்கள் அதை அவர் வெளிநாட்டில் காட்டி காசுவாங்குவதாக சொன்னார்கள்.
பிற்காலத்தில் அவரின் தன்னினச்சேர்க்கைபற்றியும அவரின் அடாவடிபற்றியும் நிறைய அறிய கிடைத்தது.

ஆரம்பத்தில் சாம்பல்த்தீவு, பின்னர் உவர்மலை கடைசியாக செல்வநாயகபுரத்தில் வீடெடுத்து தங்கியிருந்தார். அவர் ஒரு புனிதர் ஒரு பம்மாத்துக்காரர். அவரை பெரியாளாக இங்கே யாரும் மதிப்பதில்லை அவரிடம் சென்ற பொடியன்கள் எல்லாம் ஓரளவு வயதுவர நின்று விடுவார்கள். அவரைப்பற்றி அறிஞ்சவன் அவரை மகராஜ் என்றோ சுவாமி என்றோ கூப்பிடமாட்டான் மசிர்ராஜ் என்றோ கல்மஸ்த்தான் என்றோ இல்லாட்டி வேறமாதிரியோதான் கூப்பிடுவான்.

இப்படிப்பட்ட ஒருத்தர எங்கட சில மசிருகள் பெரிசா சொல்லுதுகள். அவற்ற செத்தவீட்டு செலவு 200,000 ரூபா இதெல்லாம் தேவையா. கடவுளைச் சொல்லி நடக்கிறது கூத்துக்கள் எவ்வளவு இது தெரிஞ்சும் ஏன் இன்னும் சிலபேர் தனிநபர்கள கடவுளா நம்புறாங்க அதை எழுதுறாங்க அவாகள் என்னைப் பொறுத்தவைரயில் அவர்களுக்கு வேற பெயர்.


எழுத்து என்பது நேர்மையாக இருக்கவேண்டும் அநியாயத்தை எதிர்ப்பதாக இருக்க வேண்டும். அதுவிட்டுவிட்டு மோசடிக்காரர்களை தூக்கிப்பிடிக்கிறதா இருக்கக்கூடாது.

தந்திரதேவா என்ற ஒருவரைப் பற்றி நான் கருத்தில் எடுப்பதையோ அதை பதிவு செய்வதையோ விரும்பவில்லை எதிர்காலத்திற்கு இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என்றதை சொல்லாமல் விடவே விரும்புகிறேன். ஆயினு சில மசிருகள் அவரை பெரிய பருப்பா காட்டி எழுதுவாதால் இதில் சில குறிப்புகளை எழுதினேன் அதையே வேலைமெனக்கேடு என்று எண்ணுகிறேன். இதைப்படிச்சிட்டும் கொஞ்சபர்பேர் என்னோட் சண்டைபோடலாம் ஆதாரங்கள் கேட்கலாம் அவங்களுக்கு சொல்வது இதுதான் தந்திராதேவாப்பற்றி நல்லது எழுதுவதுதான் கஸ்ரம் அவருடைய அசிங்கங்களை எழுதுவது இலகு ஆதாரங்களும் இலகுவாக்கிடைக்கும்.

எனக்கு தன்னினச்சேர்க்கை மற்றும் ஒழுங்கு மீறல்களில் எந்த காழ்ப்பும் கிடையாது. ஆனா அதை நேர்மையா செய்யவேண்டும். ஆனால் புனிதமானது என்று எல்லோரையும் பேக்காட்டி இப்படிச் சிலர் செய்யிறது. அவர் செத்தாப்பிறகு சில மசிர்கள் அவற்றை மசிர் எல்லாத்தையும மறைச்சிட்டு வக்காலத்து வாங்கிறது இவைமீது எனக்கு காழ்ப்பு உண்டு.

--
எஸ். சத்யதேவன்



தொடர்புடைய தொடுப்புக்கள்:

Thursday, July 3, 2008

தசாவதாரம் - இன்டலெச்ஷுவல் மசிர்கள் - கொம்பிலும் கொஞ்சம் கறத்தல்


நீண்டநாளைக்குப்பிறகு சொந்தக்காசில தியேட்டருக்கு போய் படம் பார்த்தன். ‘தல’ (இப்ப தல வேற ஆளாயிரக்கலாம் எங்கட தல கமல்தான்) படம் என்றதாலதான் போனனான் தலைவரு படம்தான் தமிழில் கொஞ்சமாவது உருப்படியான படமாயிருக்கும் என்ற எண்ணம் இந்த பேப்பர்களில படிச்சு அந்த நாளிலேயே மனசில பதிஞ்சு போச்சு.

அப்பெல்லாம் தலையிட மந்தைகளில் நானும் ஒருத்தன் ‘நாயகன்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஹேராம்’, என்று தலபடங்கள் தமிழ் சினமாவின் உச்சம் எனக்கு.

பள்ளிக்கூடம் முடிஞ்சபின்னாடி ‘அன்பே சிவம்’ ‘வசூல்ராஜா MBBS’ இரண்டும் சமூகத்திற்கு மிகச்சிறந்த நல்லதுகள் சொன்னபடம் என்றபடி உளறித்திரிஞ்சன்.

பின்னாடி இந்த 'இன்டலெச்சுவல்களோட' சேர்ந்ததுக்குப்பிறகும் அதுகள்ட புத்தகங்களைப்படிச்ச பின்னாடியும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதில்ல. மசாலாப்படம் எடுக்கிறவன்கள் எல்லாம் கள்ளன்கள் அதிலையும் தல தலட மருமவன் எல்லாம் பார்ப்பனிய பணியா கும்பல்ற கைக்கூலிகள் என்ட உண்மைகள் தெரிஞ்சபிறகு தமிழ்சினிமாப்பக்கம் தலைவைக்கிறதில்லை.

'இண்டலெக்சுவல் மகசின்கள்' சொல்ற 'சீரியஸ்' படங்கள் கிடைத்தால் பார்க்கிறனான். மாதம் மாதம் இப்படியான படங்களை போடறது. அதில ஒரு முப்பது படம் வரைக்கும் பார்த்திருப்பன். பொய்க்கில்ல சினிமா எண்டா என்ன என்பதை மனசால உணர அந்த படங்களைத்தான் பாக்கோணும்.


ஆனா உந்த ரெஸ்லிங்கையும் கொஞ்ச இங்கிலிஷ்படங்களையும் தவிர வேற இங்கிலிஷ் படங்களே கிடைக்காத சூழல்ல ஒரு பத்துப்பேரு கூடி சிரியஸ் சினிமா பற்றி கதைச்சு கதைச்சு அலுத்துப்போயிற்று. கதைக்கிறவர்களின் நோக்கம் மக்களின் ரசனையை மாத்திறது.

ஆனா புரியாத மொழியில தெரியாத நாட்டுக்கதையையும் பாத்திரங்களையும் எவன்வந்து பார்க்கப்போறான் குறைஞ்சபட்சம் தியட்டர்காட்டினாலாவது பார்க்கலாம். அதைவிட்டுட்டு புரெஜக்டரில காட்டிறீங்க என்ட கொமன்ட்ஸ்தான் வரும்.

இங்க சாப்பாட்டுக்கே டண்டணக்கா இதில நீங்க ஈரான் டண்டணக்காவையும் ருவாண்டா டண்டணக்காவையும் காட்டுறீங்க அட போடா என்டு வந்த பத்துப்பேர்ல பாதிப்பேர் ஓடிட்டான். இதில எங்கட இன்டலெக்சுவல் மசிர்கள் தண்ணியடிச்சிட்டு ஏதோ எழுதுதுகள் தன்ர ரசனைதான் உயர்ந்தது எண்டு சனங்களில தங்கட இன்டெலெச்சுவலை திணிக்குதுகள் ஏதோ இரெண்டுபேர் கொமன்ட்ஸ் சொன்னா குதிக்குதுகள்.

அப்பதான் நண்பர் மயூரன் ‘தமிழ் சினிமாவின் ஜனநாயகப் பண்புதான் அதிட வெற்றிக்குக் காரணம்’ என்று சிவத்தம்பி சேரிட வார்த்தைகளச் சொன்னது ஞாபகம் வந்தது. 100% உண்மைபாருங்கோ சீரியஸ் சினமாவில இந்த ஜனநாயகப்பண்பு இல்ல. அதனால அதை மக்கள் விரும்பல்ல. சீரியஸ் சினிமா கிடைக்கிறதோ 30 இல்லாட்டி 40 தான் அதுவும் ஒரு இடத்தில இல்லாட்டி இரெண்டு இடத்தில இருக்கும் அதை எடுக்கிறதென்டா கொஞ்சமாவது 'இண்டலெக்சுவல்களோட' பழக்கமிருக்கோணும். தனிய இல்லாம பத்துபேர் சேர்ந்து பாக்க ஏற்பாடுசெய்யோணும். அதுக்கு இன்விட்டேசன் அடிச்சு ஊர்முழுக்க குடுத்து கேனயன் என்ற பேர்வாங்கோணும்.

அப்படிக்கஸ்டப்பட்டு எடுத்து படத்தைப்பார்த்தாலும் சொல்ற கதையை விளங்க அந்த கதைபற்றிய குறிப்புகளை முன்னமே வாசிச்சிருக்கோணும். இப்படி கனக்க லோலாய்ப்பட்டு சீரியஸ் சினிமா எவன் பார்ப்பான். அப்படிப்பார்த்தாலும் அசின நயன்தாராவப் பார்க்கிற சந்தோசம் கிடைக்குமே? வெள்ளைக்காரியள் வெள்ளை என்டாலும் எங்கட ஆக்கள்தான் வடிவுபாருங்கோ அவையைப் பார்க்கிறதிலதான் எங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு.

நம்மட இசை தெரிஞ்ச கதை புரியிர மொழி விரும்பினா தியேட்டரிலயும் பார்க்கலாம் இல்லாட்டி CDயிலையும் பார்க்கலாம் எந்தக்கிராமத்திலையும் கிடைக்கும் எவனையும் தெரிஞ்சிருக்கத் தேவையில்ல கொஞ்சக் காசு இருந்தாப் போதும் இப்படி தமிழ் சினிமா சீரியஸ் சினிமாட எந்த லோலாய்களையும் தாறதில்லை. சனத்தைகூட நாம கஸ்ரப்பட்டு இன்விட்டேசன் அடிச்சு காசுகுடுத்தெல்லாம் கூப்பிடத்தேவையில்லை சனமே காசுகொடுத்துவந்து பாக்கும். கூட்டம் அலைமோதும்.

அப்பதான் யோசிச்சன் நாம சீரியஸ் படம்மூலம் கஸ்ரப்பட்டு முழுக்க நல்ல கருத்த சொன்னாலும மிஞ்சிமிஞ்சிப்போனா ஒரு பத்துபேருக்கு போகுதில்ல மிச்ச சனத்துக்கு அதைப்பற்றியே தெரியாது. அதைவிட சனங்கள் எல்லோரும் பார்க்கிற தமிழ் சினிமாவில நல்லதுகள் கொஞ்சம் சொன்னாலும் ஊர்முழுக்கப்போவுதே அதை ஏன் புறக்கணிக்கவேணும் எண்டு. அதிலையும் தமிழ் சினிமாவில நல்லதுகள் காட்டறது பேசிறது கொம்பில பால்கறக்கிற கதைதான் அதில நம்மட தல கெட்டிக்காரர் பாருங்கோ அதான் காசில்லாட்டியும் கஸ்ரப்பட்டுப் பொறுக்கி தியேட்டருக்குப் போனான். அதிலையும் தசாவதாரத்தைப்பற்றி பேசாத பேப்பர், வலைப்பதிவு இல்ல. பார்த்த பொடியன்களும் பிளந்து கட்டினாங்கள் பழைய தலயெல்லோ என்ன சொல்லியிருக்கார் என்டு பார்க்கப்போனனான்.


சும்மா சொல்லக்கூடாது கூட்டம் பிய்க்குது இருக்க சீட் தேடப்பட்டபாடு. விசில், தூசணம், கூச்சல் கூப்பாடென்று ஒரே அமர்க்களம் ஆயிரம் சொல்லுங்க காதுகிழிஞ்சசு வேர்த்துக்கொட்டினாலும் இந்த சுகம் வேறஎங்கேயும் கிடைக்காது. இதெல்லாம தமிழன்ற தனிக்குணம் படத்தில கதைக்கிறது பெரிசாக்கேக்கேல்ல கஸ்ரப்பட்டு விளங்கினதை கொண்டு மிச்சத்த எழுதுறன்.



இந்துக்குள்ள சைவம் வைணவம்


படத்தில முதற்காட்சி. 12ம் நூற்றாண்டு சைவ வைணவ மோதல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வைதீக மதம் சனாதன மதம் போன்ற கதைகள கிளப்பி இப்ப தூள் கிளப்பும் இந்துத்துவக் காரர்களுக்கு கழுவில ஏற்றியும் தூக்குக்காவடியில கொழுவி சாட்டையால அடிச்சும்தான் வைதீக மதம் திணிக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லுது முதற்காட்சி.

இதை இன்னும் விரிவாக்கினா இந்துமதம் என்ற மதமே இல்லே அது வெள்ளக்காரனுக்கு பின்னால வந்த கற்பிதம் என்டது தெரியும் பாருங்க. எனக்குத் தெரிஞ்சு பத்துக்கும் மேற்பட்ட பெரும்மதங்கள் தம்மை நிலைநிறுத்த அந்தகாலத்தில போட்டிபோட்டவை.

சைவத்தோட சமணம் பௌத்தம் போட்ட போட்டி ரொம்பப்பிரபலம் திருஞானசம்பந்தர் 60000 சமணரை கழுவில ஏற்றினத (அது என்னண்டா பின்னால கம்பிய அடிச்சு உச்சந்தலையால வெளியவரப்பண்ணி ஆக்களைக் கொல்லுறது. சில கிராமக்கோயிலில கோழிகுத்துவினம் அப்படித்தான் ) பெருமையா 5ம் 6ம் வகுப்பு சமயப்புத்தகத்தில போட்டிருக்கிறான். இதைப்படிக்கிறவன் மற்றமதக்காரனை கொல்லாம என்ன செய்வான். மற்றமதம் தேவேல்ல சைவத்துக்குள்ளேயே சுத்தசைவம் வீரசைவம் கபாலீகம் என்று போட்டிபோட்டான்கள். எல்லாம் அகிம்சையில்ல எல்லாம் கொலையும் கொலைமுயற்சியும்தான். சைவம் எண்டில்ல வைணவத்துக்குள்ளேயும் போட்டி இருக்கு இப்பவும் திருவரங்கத்தில (ஸ்ரீரங்கம்தான்) வடகலை தென்கலை பாகுபாடு இருக்கு.


இதெல்லாத்தையும் மறைச்சுத்தான் இப்ப இந்து என்ற புனிதமதத்தை சொல்றாங்கள் படத்தில பழசு ஞாபகப்படுத்தப்பட்டது பாருங்க அது இந்துத்துவாக்கு ஒரு சறுகக்கல்தான். சரி அப்ப இந்து என்ற அடையாளம் எப்ப வந்தது. அதையும் பாத்திட்டு அங்கால போவம் என்ன. வரலாற்றறிஞர் பொ.ரகுபதி சொல்லுறார் ‘ஒருமைத்தன்மையான சமய சிந்தனைக்குப் (Monotheism ) பழக்கப்பட்ட மேற்கத்தையார், அதே கண்களோடு தென்னாசிய சமய ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கு ஒற்றைத் தன்மையான ஒரு பொதுச் சொல் கொடுக்க முனைந்தபோது வசதியாக அகப்பட்டது, ஆதிசங்கருடைய வைதிகம் அவைதிகம் என்ற பிரிப்பு.

வேதத்தை முன்னிறுத்தி, அதற்கூடாகப் பிராமணியத்தை முன்னிறுத்திய சமய சிந்தனையே இந்து சமயத்தின் மூலம் என்ற கருத்தை, மேற்கத்தேய கீழைத்தேய வாதிகள் சொல்லப்போக, அவர்கள் கண்களுக்கூடாக எம்மை நாம் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்த எமது தேசியவாதிகளும் சேர்ந்து செய்த கற்பிதம் தான் இந்து சமயம் என்ற இன்றைய கருத்து.

வேதத்தையும் வேதியரையும் எமது பக்தி இலக்கியங்கள் முன்னிறுத்தவில்லையா என்று கேட்போருக்கான பதில் அந்தப் பக்திஇலக்கியங்களிலேயே இருக்கிறது. சந்தேகம் இருப்போர் மாணிக்கவாசகருடைய போற்றித் திருவகவலை ஒரு தடைவ படிக்கவும் இப்ப விளங்கும் இந்து என்ற கருத்து. சுமார் 200 ஆண்டுகால இந்த இந்துசமய கருத்தோட்டம் சைவ வைணவ சண்டையை இல்லாமல் செய்திருக்கலாம். இப்போது அது ஒரு பாசிசமாக உருவெடுக்கையில் பழைய வராலற்றை பேசுவதனூடகத்தான் ஒடுக்கப்பட்ட தலித்துக்கள், ஆதிவாசிகள், மற்றும் சூத்திரர் பார்ப்பனிய இந்துத்தவத்துக்குள் சிக்காமல் காப்பாற்ற வழி இதை பார்ப்பனியம் ஆதிக்கம் செய்யிற நாட்டில ஒரு பார்ப்பான் அதை வெகுசன சினிமாவில காட்டறது எப்படிச் சொல்லுறது.

திருவரங்கநாதர் உலா

அது மட்டுமில்ல வைணவ கோயில்ல விதவைகள் கோயிலுக்குள்ளே போறது இப்பவும் குறைவு அதிலயும் அவர்கள் சாமிய தொடுவது நடக்காத காரியம் ஆனா படத்தில விதவை மூதாட்டி உலாவரும் உற்சவ மூர்த்திய தொட்டு அதுக்குள்ள கிருமி குண்டைப் போடுறா.

இந்துக்கடவுள்மார் தலித்துக்கள்ற ஏரியாப்பக்கமே போமாட்டினம் ஆனா படத்தில திருவரங்கர் தலித்துகள்ர சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார்.

பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார். கடசியா முதலமைச்சர் பிரதமர் எண்டு ஆட்சிபீடத்தின்ர உச்ச ஆக்கள் பேசுற மேடையில நடுநாயகமாக நிற்கிறார் ஆட்சிசெய்யிறது ஆரா இருந்தாலும் அவை இந்துப் பார்ப்பனிய சொல்படிதான் நடப்பினம் என்றத எப்படி காட்டியிருக்கினம் பாருங்க. இப்படி புனிதமானதை கிண்டலடிக்கிறது தமிழ் சீரியஸ் படங்களில கூட கிடையாது மசாலாப்படத்தில இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு என்னண்டு சொல்லுறது.

அமெரிக்காவும் புஷ்ஷும்

படத்தில அமெரிக்கக்காரன் தன்ர ஆதிக்க வெறிக்காக உயிர்கொல்லி கிருமிகளை உற்பத்தி செய்யிறதும் அதை அழியாமல் காப்பாத்த CIA செய்யிற பிரயத்தனங்களும் அதிகளவாச் சொல்லப்பட்டிருக்கு. அதிலையும் CIA ஏஜென்ட கமல்ர விசயம் இந்தியாவில காரில வார புஷ்ஷுக்கு சொல்லுறது மூலம் அமெரிக்கா எந்த நாட்டில போய் என்னத்தை கக்கினாலும் தன்ர கொள்கையை மாத்தாது என்டதும் விளங்கியிருக்கும். எல்லாத்துக்கும மேல அமெரிக்காவுக்கு போற பாப்பான்கள் தான் இப்படியாக கொடிய ஆயுதங்களுக்கு கைக்கூலி வேலைசெய்யிறதையும் காட்டியிருக்கினம். CIA செய்யிற கொலைகளில சிலதை காட்டியிருக்கினம் பாருங்க இப்படி படத்தில அமெரிக்க எகாதிபத்தியத்தின் உண்மைமுகம் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கு


தலித்துக்கள்

‘உங்கள்ள எவண்டா படிச்சவன் இருக்கான்’ என்டு மணல்க்கொள்ளைக்காரன் கேக்க ‘இப்ப எங்களில படிக்காதவன் இல்ல’ எண்டு தலித் இளைஞர்கள் சொல்லிற மாதிரிகாட்சி தலித்மக்களை இனியும் எமாத்த ஏலாது என்றதை காட்டுது. ஆறுகளில் மணல்கொள்ளை போன்றவற்றை தலித்துக்கள்தான் தடுத்து சூழலியல் கேடுகள் வராம எதிர்க்கினம் இதில சாதி மசிர் ஒன்டும் இல்ல எண்டதும் காட்டப்படுகிறது. கடசியா மணல் முதலாளி தலித்தலைவர்ர காலை தொட்டுக்கும்பிடுற காட்சி என்ன சொல்லுது.

கிளைமாக்ஸ்ல ஒரு வசனத்தை சொல்வாரு கமல் ‘கடவுள் இல்லையெண்டு நான் சொல்லேல்லே. இருந்தா நல்லது எண்டுதானே சொல்லுறன்’ இதைத்தான நானும் சொல்ல விரும்பினான் இப்படி படத்தில கொம்பில கறக்க தல நிறைய முயற்சிசெஞ்சிருக்கிறார் ஆனால் பாவம் அவர்ர கைதான் நொந்துபோயிருக்கும். நம்மட சனத்துக்கு உது விளங்கியிருக்குமா?



--
எஸ். சத்தியதேவன்,

திருக்கோணமலை

Wednesday, July 2, 2008

செல்பேசிக் கண்களால் ஏழு ஒளிப்படங்கள்


படங்களின் மேற் சொடுக்கி உண்மையான அளவில் பார்க்கலாம்.





Sony Ericsson K800i | மாநகரத்தெருவோரம் - பாசிப்பயற்றுக்கஞ்சி | ஆமர்வீதி





nokia 7600 | கத்தரிப்பூ நீலத்தில் எங்கும் கடல் விரியும் | திருக்கோணமலைக் கடற்கரை





nokia N70






Sony Ericsson K800i






Sony Ericsson K800i | தனிமை






Sony Ericsson K800i | நகரத்தின் பின்புறத்தில் மழை பெய்யக்கூடும்






Sony Ericsson K800i

Creative Commons License
This work by V. Prashanthan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 United States License.


--
வி. பிரஷாந்தன்,
திருக்கோணமலை

Saturday, June 28, 2008

உயிரில்லாத ஒருவனுக்கு இதயமில்லாத ஒருத்தியின் சில காதல் நினைவுகள் துளி கண்ணீர் திவலைகள்


என்னுயிரே நீ தான் என்று சொல்லுமளவுக்குக்
கூட வார்த்தைகள் இல்லாது போயின – நீ
உயிரோடு இல்லை
இதயக் கதவை தட்டி பார்த்தாய் - நான்
திறக்கவே இல்லை – நானாகவே
திறந்து வந்தேன் - இன்று
நீயுமில்லை

உன்னைப் பார்த்த முதல் நாளில்
என்னையே பறி கொடுத்தேன்

மனதிற்குள் உன் நினைவுகளை
சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன்

ஆனால் நீ தான் - என்னால்
உள்ளே எரிமலையாய் கனன்று கொண்டிருந்தாய்
இன்று உன்னால்
என் உயிர் வாயுவே என்னை எரித்துக் கொண்டிருக்கிறது

உனக்குமில்லை - இது எனக்குமில்லை
படைத்தவன் தானே எடுத்துக் கொள்வான்
என்ற மனம் என்னிடமுமில்லை
உன்னிடமுமில்லை - இனி
என்ன செய்திடுவேன்

நாம் சந்தித்து இரு வருடங்கள் தானிருக்கும்
அதற்குள் எனை விட்டு தொலைதூரம்
சென்றுவிட்டாய்………….
இருபதாம் வயதில் மரணத்தில் - நீ
பதினெட்டாம் வயதில் அமங்கலியாய் நான்

என் கனவுகள் எனும் நப்பாசைகள்
நனவாகுவது எப்போது?
என் பெற்றோருக்கு மகனாக இருக்கும் என்னை
உன் பெற்றோருக்கு மருமகனாக்குவது எப்போது?
என்ற உன் கேள்விகளெல்லாம்
இப்போது எங்கே?

மருமகளாக வலது கால் வைத்து
புகுந்த வீடு வருவேன் என்றிருந்தேன் - ஆனால்
மலர்வளையம் வைக்கத்தான் - உன்
வாசல் படி ஏறினேன்

உன்னை என்னோடு மணக்கோலத்தில்
கனவு கண்டேன் - இன்று
பிணக்கோலத்தில் நீ………….



மூன்று முடிச்சு போட்டு மெட்டியிட்டு
மஞ்சத்தில் சங்கமிப்போம் என்றிருந்தேன்
என்னைத் தனியே விட்டு கல்லறைக்குள்
நீ மட்டும் சென்றதென்ன?

நான் எங்க சென்றாலும்
நானிருக்கும் இடத்திற்கு உன்னை
அழைத்து வரும் நண்பர்களும்
இங்கில்லை – நீயுமில்லை

நாமிருவரும் மணல்மேடுகளில் சந்தித்ததுமில்லை
மலர்க் கொத்துகள் பரிமாறியதுமில்லை
அலை நீரில் கால் நனைத்ததுமில்லை – அந்திப்
பொழுதில் அதிரசத்தில் இணைந்ததுமில்லை
நந்தவனங்களில் சிந்துகள் பாடியதில்லை
கல்லறைக் காதல்கள் கதைத்ததுமில்லை - இன்று
என் ராகமெல்லாம் முகாரியாய்…….

நெஞ்சை ரணமாக்கும் உன் நினைவுகளுடன்
எத்தனை நாளடா வாழ்வது?
என்னைப் பின் தொடர்ந்த என் நிழலே
எங்கு பார்ப்பேன் உன்னை!
எப்போது பார்ப்பேன் உன்னை!

அடுத்தது உனக்கும் எனக்கும்
திருமணப் பத்திரிகை என்றிருந்தேன் - ஆனால்
இறுதியில் உனக்கு மரண அறிவித்தல்
எழுதியவளும் நானே………

அக்னி பிரகாரத்தை சுற்றி வலம் வர
வேண்டிய காலத்தில் - நீ மட்டும்
சிதைக்குள் சென்றதென்ன?

என்னுள் ஓராயிரம் வார்த்தைப்
பிரயோகங்கள் - நீ அருகில்
வந்தால் அனைத்தும் மௌன
யுத்தங்களாய்……..

அன்று உன்னிலுள்ள காதல்
என்னுள் மௌனமாய்
இன்று உயிரில்லாத நீ
எனக்குள் உயிராய்

உன் காதலை பகிரங்கப்படுத்தினாய் - நீ
நானோ அந்தரங்கமாக்கினேன் - இன்று
உன் மரணம் பகிரங்கமாய் பேசப்பட்டது
என் காதல் அந்தரங்கமாகவே
அறுத்தெறியப்பட்டது……………..



நீ மரணத்தை தழுவினாலும்
உன் நினைவுகளுடன்
ஆயுள் வரை உயிர்த்திருப்பேன்……….


--
மீரா,
திருக்கோணமலை

Friday, June 20, 2008

அழியும் பேரினவாதம்!!!




பணத்தில் நாம் ஏழை
மனத்தில் நாம் ஒரு கோழை….
பெருகிவரும் பேரினவாதத்தின் முன்..

பெருகிவரும்
கொலைகளையும் தாக்குதலையும்
கண்டு மௌனிக்கும் மௌனிகள்
ஆனாலும்; நாமும் மனிதர்கள்;

என்றேனும் ஒரு நாள்
நாம் பூமியில் அழிவோம் என்று
யாரும் நினைத்தால் அவர்கள்
அழிந்து போவார்கள்…

நாம் மண்ணில் பாதம்
பதித்த போது பரவிய
யுத்தம் வேறு ஆனால் இன்று
பேரினவாதிகளின் அடக்கு முறை
அதிகாரம் யுத்தம் செய்கிறது

நாம் ஒவ்வொரு இறப்பிலும் கண்விழிப்போம்…
ஒவ்வொரு இறப்பும் எமக்கு ஒரு
பிறப்பு மண்ணில்…
அதுவும் தமிழன் என்பது தனிச் சிறப்பு…

மண்ணில் மனிதஇனம் அழிந்தாலும்
அழியாது நம் தமிழினம்
நாம் கோழை இனம் இல்லை
எப்போதும் “வாழை” இனம்…..


--
நதி,
சல்லி

Friday, June 13, 2008

இயலாமை



தன் கூட்டினை
தொலைத்து நிற்கிறது அந்தப் பறவை...
புதிதாய் உதித்திருந்தன
பல பச்சைக் கூடாரங்கள்...
இரத்தமும் சீழுமாய்
சிதறிக்கிடக்கும்
அதன் இனச்சிதிலங்கள்...
கூடும்
தன்னுடன் கூடிய கூட்டமும்
சிதைந்த கவலை அதற்கு..
முடிந்தவரை கொத்திப்பார்த்தது
கூரைகளை...
உடைந்ததென்னவோ
அதனலகு மாத்திரம் தான்..
இருப்பு அற்றுப்போன பின்
இறகுகள் இனியெதற்கு...
ஒவ்வொன்றாய்
பிய்த்துப்போட ஆரம்பித்தது மெதுவாக...

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

Thursday, June 12, 2008

ஆசையின் ஆர்ப்பரிப்புகள்





பிய்த்துத் தின்று செரித்து ஊளையிடும் நரிகளென
ஊற்றெடுக்கும் உணர்வுகள்
ஓவ்வொரு கணத்தையும்
குதறுகின்றன

சுற்றி நெருக்கும் அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

சுடு குழல்களின் கண்களினூடாக
என்வீட்டு குளியலறையிலும்
எட்டிப்பார்த்து என் நிர்வாணத்தில்
தனது வெற்றியை எக்காளமிடுகிறது
பேரினவாதம்

உழை.. உழை… ஓய்வொழிச்சலன்றி உழை
உன் உயிர் பொருள் ஆவி எல்லாம் என்
சுயநல அரசியலின் செருப்புகளாக
உன்குடும்ப சிறகுகள் பறக்க அல்ல அவை
பத்திரமாக இருப்பதற்கேனும் உழை என
என் ஏழ்மையின் வலியில் காலூன்றி எம்
மூலாதரத்தை உறிஞ்சி தன் வல்லமை பறைசாற்றுகிறது
ஏகாதிபத்தியம்

கறைகளின் மத்தியில் பரிசுத்தம் அவமானம்
என்றபடிக்கு உருமாறி உயிர்களின்
இருப்பை மறுப்பதை நியாயமாக்கி வாலாட்டுகிறது
மனிதாபிமானம்

அதிகாரத்தின் அகோரத்தையும்
நய வஞ்சகத்தின் துரோகத்தையும்
துணைக்கழைத்து ஊடகங்களில்
உற்பத்தி செய்யும் பொய்களில் பளிச்சிடுகிறது
ஜனநாயகம்

எதிர்ப்புகளுக்கான பரிசுகளால்
உள்ளொடங்கி உள்ளொடுங்கி இருப்பொழிந்து - அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

தன் நம்பகத்தன்மையை துறந்த இரவுகளில்
வறுமைக்கும் வெறுமைக்கும் கொடுமைக்கும் நீதிக்குமாக
அதன் ஒவ்வொரு குரலும் வழிந்தோடி
வெளிகளின் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
தேடுகிறது தன் விடுதலையை….

--
எஸ். சத்யதேவன்
திருக்கோணமலை

Wednesday, June 11, 2008

அந்தக் கடிகாரம்..




சொட்டாய் விழுந்த மழைத்துளி
சகதியுடன் சங்கமித்துக்கொண்டது..
கிழிந்திருந்த ஒரு பொத்தல் துணி
அவனை உடுத்திக்கொண்டது...
மழை
அவனில் ஒதுங்கியது...
அவசரப்பாதணியொன்று
அவனை மிதித்துவிட்டுப் போனது...
அவனில் எந்த அசைவுமில்லை...
..
...
....
.....
இதுவரை மௌனம் காத்த
அந்தக் கடிகாரம்
இரண்டு நிமிடம் நிதானித்து
பின் அலறியது.......

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

இலங்கை அரசியல்: Top 10 சொற்களும் அவற்றின் பொருளும்




இன்றைய சூழ்நிலையில் இலங்கை இனப்பிரச்சினையில் அக்கறையுள்ளவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற வார்த்தைகளாக தேசிய இனம், சிறுபான்மை இனம், சுயநிர்ணயம் போன்றவை உள்ளன. இவ்வார்த்தைகள் 2002 ற்குப்பின்னர் இலங்கையில் டொப் 10 வார்த்தைகளில் இருந்தன இப்போது அவை எந்த இடத்தில் என்பது தெரியவில்லை ஆயினும் என் தலைமுறையில் பலர் இவ்வார்த்தைகளோ இவைசொல்லும பொருளையோ இவற்றின் அரசியல்களையோ தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இன்று சூழல், போர், கிழக்கு தேர்தல் பேரினவாதத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்று நாம் பெரியளவில் பேசிக்கொண்டிருக்க அது பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் ஒரு தலைமுறை உருவாகிறது. இவை ஏற்படுத்தம் பாதிப்புக்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம். இவற்றைக்கருத்தில் கொண்டும் இவைபற்றிய என்புரிதலை ஆழப்படுத்தும் நோக்கிலும் இச்சொற்களுக்கான பொருள்களை எழுதுகிறேன்.

--
எஸ். சத்யதேவன்
திருக்கோணமலை


தேசிய இனமும் சிறுபான்மை இனமும்



தேசிய இனம் என்பதற்கும் சிறுபான்மை இனம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் தொடர்பான துணை ஆணையம் சிறுபான்மையினரைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறது. ‘இன, மொழி, கலாச்சார அல்லது சமய ரீதியாக சில தனி இயல்புகளைக் கொண்ட அல்லது தேசிய ரீதியாகத் தோன்றிய, ஆனாலும் பெரும்பான்மை அல்லது ஆதிக்கம் செலுத்துகின்றதாக தன்னைக் கருதிக்கொள்ளும் எஞ்சிய சனத்தொகையிலிருந்து, ஒரு வழியில் அல்லது பல வழிகளில் தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தாத ஒரு குழு’ என்று. சிறுபான்மை இனங்களுக்கு சிறுபான்மையினருக்கான உரிமைகளே உண்டு. சுயநிர்ணய உரிமைஇல்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

1992-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமையத்தின் பொதுச்சபை, தனது, 47/135 என்ற இலக்கத்தைக் கொண்ட பிரேரணையில், தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை விடுத்தது.

சிறுபான்மை மக்களுக்கு இப்பிரகடனம் பின்வரும் உரிமைகளை வழங்குகிறது.

  • அவர்களது உளதாம் தன்மையும் அடையாளமும் பேணப்படுதல்
  • தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவித்தல் தமது சொந்த மதத்தை ஏற்றுக்கொண்டு அதை அனுஷ்டித்தல், தமது சொந்த மொழியைப் பயன்படுத்துதல்
  • கலாசாரம், சமயம், சமூகம், பொருளாதாரம், பொதுவாழ்வு என்பவற்றில் பங்குபற்றுதல்
  • தமது சொந்தக் கழகங்களை நிறுவிப் பேணுதல்
  • தமது குழுவின் ஏனைய சிறுபான்மை மக்களுடனும் சமாதானமான தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைப் பேணுதல்
  • எவ்விதமான பாரபட்சத்திற்கும் ஆளாகாமல் தமது உரிமைகளைப் பயன்படுத்துதல்.



தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமையத்தின் பிரகடனத்தின் முன்னுரிமையில்
‘தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய பிரகடனம் தேசிய அல்லது இன, சமய,மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்துதலும் பாதுகாத்தலும், அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல், சமூக ஸ்திரப்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யும்’ எனக் குறிப்பிடுவதனுடன் இவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின் பாதுகாப்பது கடமையாகும் என வலிறுத்துகிறது.

தேசியம் என்பது ஜனநாயகம், பிறப்பால் அனைவரும் சமம், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, அபிவிருத்தி, தனிமனித உரிமை,கூட்டுரிமை ஆகிய அனைத்தையும் ஒன்று கலந்து திரட்டபட்ட ஒரு புதிய சமூக வடிவமமே. இது தான் சார்ந்த சூழலின் நிமித்தம் மொழி, மதம், இனம், பிரதேசம் என்பவற்றின் பெயரால் தன்னை அழைத்துக்கொள்கிறது.
தேசியம் தேசிய வாதத்தினூடாக கட்டியெழப்படகிறது.மன்னராட்சி ஏதேச்சாதிகார அரசுகள் மக்களாட்சி அரசுகளாக உருமாறத் தொடங்கிய ஒரு பெரும்போக்கின் மடையுடைப்பாய் தேசியவாதம் தோன்றியது. தேசிய வாதம் என்றால் என்ன?

இக்னாரிஃப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒர் அரசியல் கொள்கை என்ற வகையில் தேசிய வாதம் என்பது உலக மக்கள் தேசிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தேசிய அரசுகளுக்குள் சுய ஆட்சியலகுகளாக அல்லது தம்மளவில் தேசிய அரசுகளாக அமையும் சுயநிர்ணய உரிமை உண்டு என்றும் கருதும் ஒரு நம்பிக்கையாகும். ஒருகலாச்சார இலட்சியம் என்ற வகையில் தேசியவாதம் என்பத ஆண்களும் பெண்களும் பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருக்கும் போதிலும் தேசிய இனமே அவர்களுக்குரிய அடிப்படை அடையாள வடிவத்தை தருகின்றது. என்ற கண்ணோட்டத்தைக் குறிக்கின்றது.

ஒரு தார்மீக இலச்சியம் என்ற வகையில் தேசியவாதம் என்பது ஒரு வீரத்தியாக ஒழுக்கம் அக அல்லத புற எதிரிகளிடமிருந்து தன் தேசிய இனத்தைப்பாதுகாப்பதில் வன்முறையை பயன்படுத்தவதை நியாயப்படுத்துதல் என்பவற்றைக்குறிக்கும். ஆயினும் பல்வேறு அறிஞர்களின் கூற்றுப்படி தேசியவாதம் என்பது, பற்றும், அர்ப்பணிப்பும் கோருகின்ற வரலாறு, இனத்துவம் அடையாளம் காணக்கூடிய வாழ்புலம் என்பவற்றால் பினைப்புண்ட, அரசியல் ரீதியாக ஒன்றிணைந்த ஒரு சமூகத்தின் வரித்துக்கொள்ளப்பட்ட உறுப்புரிமையாகும். மக்களை அரசியலில் பங்காளிகளாகப் பிரவேசிக்கச் செய்தமை தேசிய வாதத்தின் சாதனையாகும். ஆக்கிரமிப்பு நோக்குடைய தேசிய வாதம் ஆதிக்க வெறி மிக்கதாகவும் பிற்போக்கானதாகவும் உள்ளது மக்களின் உரிமைக்காக எழும் போராட்டத்தை வழிநடத்தும் தேசிய வாதம்தேசப்பற்றாகவும் முற்போக்கானதாகவும் அமைகிறது.

இவற்றின் அடிப்படையிலே தேசியஇனம் என்பது வரையறுக்கப்படுகிறது.ஜோசப்ஸ்ராலின் தேசிய இனங்களுக்கு நான்கு வரையறைகளை கூறுகிறார். பொதுப்பிரதேசம், பொதுப்பொருளாதாரம், பொதுமொழி, பொது வரலாறும் அதனாலான பொது உளவியலுருவாக்கமும் என்பனவெ அவை. ஆயினும் தேசியம் அல்லது தேசியஇனம் என்பதற்கு ஸ்டாலின் (J.V.Stalin 1913) முதல் ஏர்னஸ்ட் ஜெல்னர் (Earnest Gellner 1983) வரை பலர் பல வரைவிலக்கணங்களை தொகுத்துப் பின்வருமாறு கூறலாம்

“Self – Identifying stable modern community of people, who share a sense of group identity and solidarity based on common language, common culture, and [in general] common territory”


பொதுவான மொழி, பொதுவான காலாச்சாரம், பொதுவான பிரதேசம் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமக்கிடையே குழும உணர்வையும் ஒருமைப்பாட்டையும் பகிர்ந்து கொள்ளும் சுய அடையாளமுடைய நிலையான நவீன மக்கள் சமூகமே தேசியமாகும்.

ஜனநாயகம் தற்போதுள்ள நாகரிகமான ஆட்சிக் கோட்பாடாகும். ஆயினும் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆதிக்கத்திலுள்ள சமுதாய சக்திகள் அதன் தன்மையைத் தீர்மானிக்கின்றன சமுதாய மாற்றம் அவசியமாகும் சூழலில் அவை கேள்விக்குள்ளாகின்றன ஆதிக்கத்திலுள்ளோருக்கு பயன்தராத போது அவை மீறப்படுகின்றன. ஆயினும் சில அடிப்படையான பொதுப்பண்புகளை வைத்தே ஒரு சமுதாயம் ஜனநாயக சமுதாயமா?இல்லையா என நாம் முடிவு செய்கிறோம். ஒவ்வொரு தேசிய இனத்தினும் தேசிய இன உணர்வும் ஒவ்வொரு மொழி பேசுவோரதும் மொழி உரிமையையும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவரதும் மத நம்பிக்கைக்கான சுதந்திரமும் ஒவ்வொரு தேசத்தினதும் தேசியத் தன்மையும் மதிக்கப்பட வேண்டியன. ஒரு தேசிய இனத்தின் இருப்பும் அதன் தேசியத்தன்மையும் மிரட்டலுக்கு உள்ளாகும்போது அந்த இனம் அம்மிரட்டலை எதிர்த்து போரிடுவது நியாயமானது. இந்நிலையில்த்தான் சுயநிர்ணய உரிமைகான கோரிக்கை எழுகிறது. ஏனெனில் தேசிய இனத்திற்கே சுயநிர்ணய உரிமை உண்டு. ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது.




சுயநிர்ணய உரிமை



சுயநிர்ணய உரிமை என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றுதான். தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டம் முதன் முதலாக ஐரிஸ் மக்களிடமிருந்தே வெடித்தது. அந்த ஐரிஷ் மக்களின் போராட்டம் தான் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. 1776- ல் பிரித்தானியாவிற்கெதிராக எழுற்சி பெற்ற அமெரிக்க சுதந்திரப்போர் ஒருதேசியம் தனது சொந்தப் போராட்டத்தின் மூலம் சுய நி;ணயஉரிமையைவென்றெடுக்க முடியும் பாடத்தை உலகத்திற்கு முதற்தடவையாகப் புகட்டியது. 1867-ல் கனடாவில் சமஷ்டி ஏற்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகப்பழமையான சமஷ்டி என கருதப்படுகிறது. இது சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதை மாத்திரமல்ல இவ்வாறு இணக்கமான முறைகளில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கிய ஒன்று என்ற உன்மையை உலகிற்கு முதல்தடைவையாக உணர்த்தியது.

1896-ம் ஆண்டு கார்ல் கவுஸ்ட்கி தலமையில் லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1906-ல் சுவீடனிலிருந்து நோர்வே சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பிரிந்தது. சமாதான முறையிலே இருநாடுகள் சுயநிர்ணய உரிமையைக் கையாண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனால் சுய நிர்ணய உரிமை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு ஆயுதமாக பரவலாகக் கருதும் மனப்பாங்கு வளர்ந்தது. 1917-ல் ரஸ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி மனித குல வரலாற்றில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதற்தடையாக தொழிலாளர் தலைமையில் சோஷலிசப் புரட்சி ஒன்று வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொலனிய மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுத்தது.

தொடர்ந்து முதலாம் உலக யுத்த முடிவிலே தோல்வியடைந்த நாடுகளின் பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலையைப் பெற்றன. இந்நாடுகளின் விடுதலையை துரிதப்படுத்தக் கூடியவிதத்திலும் போருக்கு பிந்திய நிலைமையை நெறிப்படுத்தும் வகையிலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வ+ட்ரோ வில்சன் 1918-ம் ஆண்டு தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய தனது 14 அம்ச திட்டத்தை முன் வைத்தார். இத்திட்டம் ஆசிய ஆபிரிக்க மக்களின் ஆதரவைப்பெற்றது. யுத்தத்தின் முடிவில் 1919-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வார்செயில் ஒப்பந்தத்திலும் சுயநிர்ணய உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேசங்களின் லீக் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தது. 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமைக்கு சட்ட வரையறைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவனப் படுத்தப்பட்ட அந்தஸ்த்தை வழங்கியது.

சுயநிர்ணயம் என்பதற்கு பலர்பலவிதமாக வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். அவற்றின் முக்கியத்தவம் கருதி அவைகளை நோக்குவோம். ருசியப் புரட்சியை தலமை தாங்கி நடத்திய லெனினே சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதலில் திட்டவட்டமான வரைவிலக்கணத்தை கொடுத்தவர்;.அவர் சுயநிர்ணயத்தை ‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது அரசியல் ரீதியில் சுதந்திரத்தை குறிக்கும். அடக்கியொடுக்கப்படும் தேசிய இனத்திடமிருந்து அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கிறது. குறிப்பாக அரசியல் சனநாயகத்திற்கான இக்கோரிக்கை பிரிந்து செல்வதற்கான ப+ரண உரிமையையும் இவ்வாறு பிரிந்து செல்வதற்கு பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உரிமையையும் குறிக்கும்’ ஆயினும் சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன் சமுதாய அமைப்பைத்தீர்மானிக்கவும் பேணவுமான உரிமையைக் குறிக்கிறது. ஒரு அரசமைப்பின் கீழ் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இணைந்து ஒரே நாடாக வாழ்வதா அல்லது தனித்தனி நாடுகளாகப் பிரிவதா என்று தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு. எனப் பொதுவாக சுயநிர்ணயத்திற்கு விளக்கம் கூறுவர். ஏலிசபெத் ஜமீலா கோன் என்பவர் விளக்கியவாறு சுயநிர்ணய உரிமை என்பதனை சுயம் - நிர்ணயம் - உரிமை (Right – Self – Determination) என மூன்று தனித் தனிச் சொற்களாகப் பிரித்தால் அதன் அர்த்தம் விளங்கும்.

சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக இருக்காலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும் குறிக்கிறது.

நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத் தேசிய சமூகங்களே என்பதைக்குறிக்கிறது

உரிமை - என்பது இது ஒவ்வொரு தேசியத்திற்கும் உள்ள பிற்ப்புரிமையே தவிர சலுகை அல்ல என்பதைக் குறிக்கிறது.

ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது அரசியல் தலைவிதியை, தான் சுதந்நிரமாக வாழும் அரசியல் வடிவத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உடையது என்பதைக்குறிக்கிறது. இது பிரிந்து போகும் உரிமையை உள்ளடக்கியதாகும்.



உள்ளக சுயநிர்ணய உரிமையும் வெளியக சுயநிர்ணய உரிமையும்



முன்னர் ஐரோப்பிய கவுன்ஸிலின் சித்திரவதை தடுப்புக் குழுவின் தலைவராகவும், பின்னர் யூகோஸ்லோவியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் (International Criminal Tribunal for the Former Yugoslavia) தலைவராகவும் இருந்த புளோரன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அண்டனியோ கெசாசி (Antonio Cassese) தனது மக்களின் சுயநிர்ணய உரிமை (Self Determination of people) என்ற நூலில் சுயநிர்ணயஉரிமையை உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக சுயநிர்ணய உரிமை என இரு வகையாகப் பிரித்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லாமல் அரசுக்குள்ளேயே அதில் வாழும் சமூகங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் உரிமையைக் குறிக்கின்றது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தை பிரயோகிக்காமல் பல நாடுகள் இக்கருத்தையே இதுவரை வலியுறுத்தி வந்திருக்கின்றன. சீனா ஒற்றையாட்சியின் கீழ் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை 1950களிலிருந்தே முன்வைத்து வருகிறது.

நெல்சன் பீரி (Newlson Peery) தேசியங்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டின் அளவைக்கொண்டு ஒவ்வொரு தேசியத்தினதும் எதார்த்த தன்மைக்கேற்ப அதனை மூன்று பிரிவாகப் பிரித்து அவற்றின் உரிமைகளை வரையறுத்திருக்கின்றார்.

முதலில் தேசியங்களை Nation என்றே அவர் குறிப்பிடுகிறார். பிரிந்து செல்லக்கூடிய பிரதேச அடித்தளத்தைக்கொண்ட சமூகங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு என்கிறார். (உதாரணம் இலங்கையின் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள்)

இரண்டாவதாக பிரிந்து செல்லக் கூடிய சூழுல் இல்லாத ஆனால் ஒரு பிரதேசத்திலாவது அடர்த்தியாக வாழுகின்ற எண்ணிக்கையில் குறைவான தேசியங்களே சிறுபான்மை தேசிய இனம்(Minority Nationality) எனக் குறிப்பிட்டுள்ளார். (உதாரணம்:- மலையகத் தமிழ் மக்கள்) இவர்களுக்கு பிரிந்து செல்லும் வாய்ப்பு இல்லாத போதும் தாம் வாழும் பிரதேசத்தில் சுய ஆட்சி அல்லது சுய நிர்வாகம் போன்ற ஏற்பாடுகளை அமைத்துக்கொன்டு வாழும் சுயநிர்ணய உரிமை உண்டு என விபரிக்கின்றார்.

மூன்றாவதாக, எந்த ஒரு பிரதேசத்திலும் அடர்த்தியாக வாழாமல் ஆங்காங்கே பரந்து வாழும்தனித்துவமான தேசியங்களையும் (உதாரணம் இலங்கையில் வாழும் பறங்கியர்) ஒரு பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்து சுயாட்சி அல்லது சுய நிhவாக ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்தாலும் அதற்கு வெளியே பரந்து வாழ்கின்ற மக்களையும் (வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற ஈழத்தமிழர்) தேசிய சிறுபான்மையினர் (National minority) எனக்குறிப்பிட்டு இவர்களுக்கு சம உரிமையை உறுதிப்படுத்தும் சிறப்புச் சட்டங்களும் ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும். அவற்றைப் பெறும் சுயநிர்ணய உரிமை இவர்களுக்கு உண்டு எனவும் இவர் குறிப்பிடுகிறார்.

பிரிந்து போகும் உரிமை என்றால் பிரிவினையையே குறிக்கும் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. விவாகரத்துக்கான உரிமை விவாகரத்துச் செய்யுமாறு எவரையும் வற்புறுத்துவதில்லை. அந்த உரிமை இருப்பதனால் பெண்களுக்குச் சமுதாயத்தில் கூடிய பாதுகாப்பு ஏற்படுகிறது. தாங்க முடியாத துன்பமிக்க தாம்பத்தினின்று விவாகரத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுதலையைத் தருகின்றது. விவாகரத்துச் செய்வதற்கான உரிமை ஒரு சமத்துவமான நியாயமான உறவுக்கு உதவுகிறது. கள்ள உறவுகளும், தற்கொலைகளும், கொலைகளும், வன்முறைகளும் நிகழாது தடுக்க உதவுகிறது. விவாகரத்துச் சாத்தியம் என்ற காரணத்திற்காக மட்டுமே யாரும் அதை நாடுவதில்லை. அது போன்றே பிரிந்து போகும் உரிமை இருப்பதால் மட்டுமே ஒரு தேசிய இனம் பிரிந்து போய்விடாது. அந்த உரிமை இல்லாதவிடத்து ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது. தனக்கு மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை அது போராடி வென்றெடுப்பதோடு மட்டுமல்லாது பய்னபடுத்தியும் விடுகிறது. சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் பிரிவினையைத்தடுக்க முனைவோர் இதை உணரவேண்டும்.

ஒரு தேசிய சமூகம் பிரிந்து செல்ல விரும்பும் போது அதற்கான அவசியம் அங்கு நிச்சயமாக இருக்குமானால் அதற்கான வாய்ப்பும் அதற்கான அகப் புறச்சூழலும் சாதகமாக அமையுமானால் அது சாத்தியமாகும். ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இரண்டு தேசியங்கள் ஒன்றாக வாழ்ந்து ஜனநாயக முறையில் பிரிந்து சென்றதை உலக வரலாறு கன்டிருக்கிறது. சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்தமை இதற்கான பழைய உதாரணமாகும். செக்கும் ஸ்லோவாகியாவும் ஜனநாயக முறையில் பிரிந்து சென்றது அண்மைக்கால உதாரணமாகும். ஒடுக்கும் ஒரு தேசியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிகரமாக பிரிந்து சென்று தனியரசை அமைத்துக் கொண்ட பல தேசிய சமூகங்கள் உண்டு. பிரித்தானிய ஆட்சியிலிருந்து அமெரிக்கா பிரிந்தது முதல் அண்மைக் காலத்தில் எரிதிரியாவும், கிழுக்குத்தீமோரும் பிரிந்து தனி நாடுகள் அமைந்தமை வரையிலான பல உதாரணங்கள் இதற்குண்டு.

இதைத்தவிர சமஸ்டி முறையில் தேசியங்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு கண்ட பல உதாரணங்களை உலகம் கண்டிருக்கிறது. கனடாவின் சமஸ்டி முறை (இங்கு கியூபெக் மாநிலத்தின் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை) இந்தியாவின் மாநில ஆட்சி முறை (இங்கும் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான உறவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இன்னுமுள்ளன) போன்றவை இதற்கு சல உதாரணங்கள். சுவிட்சர்லாந்திலுள்ள கன்டன் முறை அந்நாட்டுக்கே உரிய முறையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது. அதே போல் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சில தேசியங்க்கள் மீண்டும் இணைந்துள்ளன கிழக்கு ஜேர்மனி மேற்கு ஜேர்மனி என பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைந்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவது என்பது ஓர் ஒற்றை வழிப்பாதை அல்ல என்பதுதான். ஒரு தேசிய சமூகம் மாத்திரம் தீர்மானித்து அதனை அமுல்படுத்தும் நிலைமை பொதுவாக இருப்பதில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசியம் அதற்கெதிரான போராட்டத்தைத் தொடங்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது ஒடுக்கும் தேசியத்தின் மத்தியிலிருந்து பெரும் தேசிய வாதம் வெறித்தனமாக கிளம்புகிறது. தேசிய ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலைமைகளின் போது ஒடுக்கப்படும் தேசியங்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய திட்டவட்டமான ஏற்பாடு சாவதேச அரங்கில் இன்று வரைகிடையாது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் கூட சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைக்குச் சாதமாகப் பயன்படுத்தக்கூடிய சட்ட வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. சாராம்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளையே பிரநிதித்துவப்படுத்துகிறது. ஓவ்வொரு நாட்டிலும் எந்தெந்தத் தேசியம் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்தந்தத் தேசியங்களின் கருத்தே ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கிறது.

பிரிவினைக் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும் இயல்பானவையாகவும் இருப்பதில்லை.




சுயநிர்ணய உரிமைபற்றிய ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலகளாவிய கருத்தும், விமர்சனங்களும்.



1960-ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய 1514(XV) இலக்க தீர்மானம் அதாவது ‘காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம் | சுயநிர்ணய உரிமையின் ஜீவத்துடிப்புக்கு பலத்த அடியைக்கொடுத்துள்ளது. இப்பிரகடனத்தின் இரண்டாம் அலகு ‘தேசியங்கள் தமது அரசியல் அந்தஸ்த்து பொருளாதார சமூக கலாச்சார அபிவருத்தி தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுப்பத்கான சுயநிர்ணய உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு’ எனக்கூறுகிறது. ஆனால் பிரதேச உரிமையும் பிரிந்து சென்று அரசை அமைக்கும் உரிமையும் அதில் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 6ம் அலகு ‘தேசிய ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு முயற்சியும் ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானது’ என பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிiமையை முற்றாகவே அது நிராகரித்துள்ளது.

நாடுகள் கூட தத்தம் தேசிய நலனை முன்வைத்தே சுயநிர்ணய உரிமைக் கொள்கையை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. முதலாம் உலக மகா யுத்தத்தின் போது சுயநிர்ணய உரிமையை முய்வைப்பதில் முனைப்பாக நின்ற முதலாவது நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி வில்சன் இவ்விடையத்தில் ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்பு இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா தனக்கு சாதகமான சமயங்களில் மாத்திரமே இவ்வுரிமையை அங்கீகரிக்கிறது. பல தேசியங்கள் வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு தேசியமும் பிரிந்து செல்லக்கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவுக்கெதிராக தைவானுக்கு ஆதரவு நல்கி வருகிறது. கொலனித்துவ அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் ஒருநாட்டுக்குள் வாழும் தேசியங்களுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பிடிவாதமாக கூறிவரும் இந்தியா, திபெத் பௌத்த மதத் தலைவரான தலாய்லாமாவை வைத்துக் கொண்டு திபெத் சீனாவிலிருந்து பிரிவதை ஆதரிப்பதாக கூறிவருகிறது. சீனாவில் வாழும் மொத்த சிறுபான்மை மக்களின் தொகை ஐந்து சதவீதத்திற்கும் குறைவானதாகும். இதில் பெரும்பாலான தேசியங்கள் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் வாழவில்லை. ஆயினும் அங்கு வாழும் சின்னஞ்சிறிய தேசியங்களுக்குக் கூட சுய நிர்வாக அலகுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறிய தேசியம் எனக் கருதப்படும் ஹோசே (Hoche)மக்களுக்கு (இவர்களது தொகை 2000 பேர் மாத்திரமே) கூட நிர்வாக அலகு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் உள்ள திபெத்திய மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது.

ஆயினும் யூகோஸ்லோவியா பிரச்சினையில் அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையை சுயநிர்ணய உரிமையுடன் இணைத்து அவற்றின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தன. முன்னைய யூகோஸ்லாவியாவில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த அன்டனியோ கசாசி ~மக்களின் சுயநிர்ணய உரிமை| என்ற பெயரிலே 1995-ல் வெளியிட்டட நூலில் கொலனிகளுக்கு மாத்திரமே பிரிந்து செல்லும் உரிமை உண்டு. அதே வேளை ஒரு நாட்டுக்குள் வாழுகின்ற தேசியங்கள் பிரிந்து செல்லாமல் தமது கலாச்சார, பொருளாதார, அரசியல் நிலமைகளை தமது சுய விருப்பத்தின் பேரில் அமைத்துக்கொண்டு வாழும் உள்ளக சுயநிர்ணய உரிமை மாத்திரமே உண்டு எனவும் வரையறுத்துள்ளார். இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமை உட்பட தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை அந்த தேசியங்களுக்கு மறுத்துள்ளார். இவரது இந்தக் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை இன்று ஏற்றுக்கொள்கிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே மோலோங்கியிருக்கும் சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்தானது விடுதலை கோரும் கொலனிகளுக்கும் அரசுகளுக்கும் உரிய ஒன்றே தவிர தேசிய சமூகங்களுக்கு உரியது அல்ல என்பாதாகும். பல சமூக ஆய்வாளர்களும் கூட இக்கருத்தைத்தான் இப்போது முனைப்பாக முன்வத்து வருகிறார்கள். 1987 ல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இக்கருத்தை பகிரங்கமாக முன் வைத்தது.

இதுவரை காலமும் சயநிர்ணய உரிமையின் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அம்சமாகவே உள்ளக - வெளியக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல கரதப்பட்டன. சாராம்சத்தில் பிரிந்து செல்லக்கூடிய சூழலைக் கொண்டுள்ள தேசியங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்ல இயலாத சூழலில் உள்ள மக்ளுக்கு பிரிந்து செல்லாமல் தனக்குரிய அரசாங்க வடிவத்தை தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதையுமே அது குறித்தது. ஆனால் 1960களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்துள்ளது. ஒரு அரசுக்குள் வாழும் எந்தத் தேசிய சமூகமும் அது பிரிந்து செல்லும் சூழுலில் வாழ்ந்தாலும் கூட அதற்கு பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. இதன் மூலம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் ஆத்மா கொலை செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசின் சுயநிர்ணய உரிமையாக அர்த்தப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றில் தலையிடுவதற்கு பிற சக்திகளுக்கு உரிமை கிடையாது எனவும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதற்கு எந்த ஒரு தேசியத்திற்கும் உரிமை கிடையாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சமநிலைப்படுத்துவதில் ஒரு புதிய ஏற்பாட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.

ஆனால் அதற்கேற்ப ஒரு நாட்டுக்குள் வாழும் பல்வேறு தேசியங்களுக்கிடையிலான உறவை சமநிலைப்படுத்தக்கூடியதான எந்த ஏற்பாட்டையும் முன்வைக்கத்தவறியுள்ளது. உதாரணமாக ஒரு தேசியம் தனது அரசினால் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவோ தனக்கு காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாகவோ தன்மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமறைக்கு எதிராகவோ முறையீடு செய்வதற்கும் நிவாரணம் பெறுவதற்கும் எந்த ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட ஏற்பாட்டையும் ஐக்கியநாடுகள் சபை கொண்டிருக்கவில்லை. இதனால் அரசுகள் மேற்கொள்ளும் தேசிய ஒடுக்கு மறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு எந்த ஒர ஏற்பாடும் இல்லாதிரப்பதுடன் ஒடுக்கும் தேசியங்களின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன. சாராம்சத்தில் ஒடுக்கப்படும் தேசியங்கள் தம்மை ஒடுக்கும் தேசியங்களில் தங்கி வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமையானது தன்னகத்தே புரட்சிகளையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கக் கூடிய ஆற்றல் மிக்க வித்துக்களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறைக்க இயலாது. அதற்காக அதனை உரு பயங்கரவாதக் கோரிக்கையாக எவரும் முத்திரை குத்திவிட முடியாது. சிறு தேசிய சுமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது குரலுக்கு வலிமை சேர்க்கும் ஓர் அடிப்படையை இவ்வுரிமை வழங்குகிறது. மறுபுறத்தில் ஒர தேசிய சமூகத்தின் உரிமையை மற்றொன்று மீறாமல் பரஸ்பர நல்லெண்ணம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியங்களுக்கிடைமயில் உளப்ப+ர்வமான ஐக்கியம் ஏற்படுவதற்கு இவ்வுரிமை மாத்திரமே வழிகோலுகிறது.

இதனால் தான் 1998 நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ந் திகதி வரை யுனஸ்க்கோவினால் பாசிலோனா (Barcelona – Spain) நகரில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்களின் மாநாடு விரிவான விவாதத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியங்களைப் பிளவுபடுத்துவதற்கு பதிலாக தேசியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்பதற்கான ஓர் அடிப்டையை நல்கி சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வந்தது. (UNESCO CENTRE 1999) சமூக விஞஞானக் கண்ணோட்டத்தின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. தான் என்ன ஆடை உடுத்த வேண்டும், தான் என்ன உண்ண வேண்டும் என்பதையும் அதைவிட பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சுயவிருப்பத்தின் பேரில் திருமணம் செய்யும் உரிமை, தனக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கவும் கைவிடவும் உள்ள உரிமை போன்ற பல உரிமைகளைக் கொண்டிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதே சமயம் ஒருவர் மற்றவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தின் கூட்டுரிமை தனிமனித உரிமையைவிட மேலானது. சமூகத்தின் நலன்பாதுகாக்கப் பட்டால் தான் தனிமனிதனின் நலனும் பாதுகாக்கப்படும். சமூகத்தின் கூட்டுமுயற்சியின் மூலமே தனி நபர்களது பல ஜீவாதார உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். தேசியவெறி, தேசியகாழ்ப்புணர்வு, மதவெறி, சாதிவெறி போன்ற வெறிகள் ஒரு சமூகத்திடையே ஊட்டப்பட்டு அவை மற்றொரு சமூகத்தை அழிக்கும் பொழுது தனிநபர் உரிமைகள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை. நாஸிச பேரினவெறிக்கு எதிராக தனி;த்தனியாக யூதர்கள் எதைத்தான் சாதித்தார்கள்? பல தேசியங்கள் கூட்டுச் சேர்ந்தே அதனை முறியடிக்க முடிந்தது. தேசியத்தின் அடையாளங்களையும் தேசிய உரிமைகளையும் தேசியமாக ஒன்றுபட்டுத்தான் வெற்றி கொள்ள முடியும்.


பின்னிணைப்புக்கள்


1) லண்டன் சர்வதேச காங்கிரஸின் தீர்மானம், 1896.

இந்தத் தீர்மானம் கூறுவதாவது :

எல்லாத்தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான சகல உரிமைகளும் உண்டு என்று இந்தக் காங்கிரஸ் பிரகடணப் படுத்துகிறது. மற்றும் இராணுவ, தேசிய அடக்குமுறைகளால் துன்பப்படும் சகல நாட்டுத்தொழிளாளர்கள் மீது அனுதாபம் தெரிவிக்கும் உரிமையும் அவைகளுக்கு உண்டு. சாவதெச சமூக ஜனநாயகத்தை அடைவதற்காகவும் சர்வதேச முதலாளித்துவத்தை தொற்கடிப்பதற்காகவும் இந்த நாடுகளின் தொழிளாளர்களை வர்க்க உணர்வு அடிப்படையில் ஒன்றிணையுமாறு இந்தக் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.


2) ஐக்கியநாடுகள் :
காலனித்துவ நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்குமாறு கோரும் பிரகடணம், 1960.

பொதுச்சபைத் தீர்மானம் 1514 (XV), டிச 14 1960.

பொதுச்சபை,
மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண் சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கோருதல்.

சமத்துவ உரிமைகளின் படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின் படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும் நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்,

எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்,

அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை அறிதல்,

நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான இயக்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்,
எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் உலகமக்களின் வேணவாவினை உணர்தல்,

சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது என்பதை அறிதல்,

மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்,

சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச் செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பைபுக்கு மாறாக உழம் உந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருக்கவும்,

பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை முடிவுக்கு கொண்டவருதல், சிக்கலான பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமானது என்று நம்பிக்கை கொள்ளல்,ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.


பேருதவி செய்தவை

1.தமிழ்த் தேசியம் -தேவநேசன் நேசையா. மார்க்கா நிறுவனம
2.இனமுரண்பாடும் வரலாற்றியலும் - கலாநிதி.ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தன, சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு.
3.முஸ்லிம் சாஹியத்தின் பன்முக அடையாளங்களும் அரசியல் தேர்ந்தெடுப்புக்களும்.
4.சுயம் நிர்ணம் உரிமை - பி.ஏ. காதர், அப்பால் தமிழ்
5.சர்வதேச இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் -பி.ஏ.காதர், அப்பால் தமிழ்

Monday, June 9, 2008

மனிதன்




இறந்துபோன அதை
இறக்காத எல்லோரும்
சுமந்தனர்
தடாகம் பாராட்டியது
தண்ணீர் பாராட்டியது
தாமரை பாராட்டியது
மனிதனின் வாய் மட்டும்
இறந்துபோன அதை விட
இழிந்தே கிடந்தது
பாராட்ட மனம் இன்மையால்

--
பெரிய ஐங்கரன்
புலோலி தெற்கு

தேசத்தின் வரைபு




முகத்திலறையும் காற்று
அழுகிய பிணங்களின்
அடையாளங்களைக்
கூவிச் செல்கிறது.
பலதடவை அது ஏக்கங்களின்
சுடுமூச்சையும்
காவி வருகிறது.

அவ்வப்பொழுதுகளில்
மரணத்தின் அழைப்புகளையும்
அழுகைகளையும்
அருகிலும் தொலைவிலிருந்துமாக
கொணர்ந்து தொலைகிறது

அடையாளப்படுத்தலற்ற
சாவுகளின் தரவுகளை
சேமக் காலைச் செய்திகளாக
வானொலிகள் உச்சரிக்கின்றன
நல்லிணக்கம் பற்றிய
பாடல்களின் இடையிடையே...
தினசரி தொலைக்காட்சி
திரைகளின் முகங்கள்
குருதி வடியும் சம்பவங்களையே
மீண்டும் மீண்டும்
மேலெழுப்புகின்றன.
காகித முகங்களையும்
விடுதலை வேண்டுதல்களையும்
கைகளால்
உயர்த்திப்பிடித்தபடியுள்ள
பெண்களதும் முதியவர்களதும்
கவலை தோய்ந்த முகங்களாக
அவை திரையிடப்படுகின்றன.
பெரியவர்கள் தொலைவதும்
சிறியவர்கள் தேடுவதுமாக
நடைமுறை மாறிவிட்டது

தெருவில் நடக்கையிலும் -பலர்
அழைத்துப் போனவர்களாலும்
தொலைக்கப்பட்டதாக வாக்களிக்கிறார்கள்

வாழ்வதற்கானவர்களையும்
வாழ வைக்கும் எல்லாவற்றையும்
சிதைத்து
புதைவுகளின் மேடுகளில்
கோபுரங்களைக்
கட்டியெழுப்புவதாக உளது
தேசத்தின் வரைபு

--
சம்பூர் எம். வதனரூபன்

Saturday, June 7, 2008

என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு இங்குமங்கும் தாவுகிறது அந்தப் பூனை...





















என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு